Sunday 4 December 2011

தானியேல்





எழுதப்பட்ட காலம் :                        கி.மு.535-530


கருப்பொருள்       :                         உலக இராஜ்ஜியங்களின் மேல்  
                                 தேவனின் அதிகாரம்  

எழுதியவர் :                               தானியேல்




ஆசிரியர் பற்றி :




தானியேல் என்ற பெயருக்கு "தேவன் என் நியாயாதிபதி" என்று பொருள். இவனே புத்தகத்தை எழுதியவனாகவும் இருக்கிறான். யூதா இராஜாவாகிய யோக்கீமின் மூன்றாவது ஆண்டில் நடந்த முதல் சிறையிருப்பில் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டான். அப்பொழுது அவன் 17 வயதுடையவனாக இருந்திருக்கலாம். சிறையிருப்பின் முதல் வருடத்தில் இவனுடைய ஊழியம் ஆரம்பமாயிற்று. இவனது பரிசுத்த வாழ்க்கை, ஜெபம், ஞானம் இவனை பாபிலோனின் மேன்மையான இடத்திற்கு கொண்டு சென்றது. இவன் 7 இராஜாக்களின் காலத்தில் தன் ஊழியத்தை செய்தான். அன்றைய சாம்ராஜ்ஜியங்களில் உயர் பதவிக்கு வரும் நபர்கள் வெளியாட்களாக இருக்கும் பட்சத்தில் (அதாவது இராஜவம்சத்தை சாராதவனாகயிருக்கும் போது) அன்னகனாக மாற்றும் வழக்கம் இருந்தது.

தானியேலும் அப்படி மாற்றப்பட்டிருக்க வேண்டும் (தானி 1:3, II இராஜா 20:18, மத் 19:12). தன் மேன்மையின் மத்தியிலும், பாடுகளிலும் தேவனை இடைவிடாது ஆராதித்து வெற்றி பெற்றவன். இவன் பெற்ற வெளிப்பாடுகளின் சிறு பகுதி தன் காலத்தில் நிறைவேறுவதையும் கண்டவன். அதாவது பாபிலோனிய வீழ்ச்சி, மேதிய, பெர்சிய இராஜ்ஜியத்தின் தொடக்கம் போன்றவையாகும் (தானி 5 அதி). தன்னுடைய 80வது வயதில் மகிமையான வெளிப்பாடுகளை பெற்று அதை நமக்குக் கொடுக்கும்படியாக கர்த்தர் இவனை பயன்படுத்தினார். தன் வாழ்க்கையின் ஆரம்பமுதல் முடிவு வரை தேவனுக்கு உண்மையானவனாக, கர்த்தருக்குப் பயந்து காரியங்களை நடப்பித்த ஒரு சில தேவ மனிதர்களில் ஒருவனாக இடம் பிடித்தான். சமகால தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலினால் முன்னுதாரணமாகக் கூறப்பட்டவன் (எசே 14:14, 20 ; 28:3). இவனது மரணம் அநேகமாக இறுதி நாட்களை பாபிலோனிலேயே கழித்து இயற்கை மரணம் அடைந்திருக்க வேண்டும். 



தானியேல் புத்தகத்தின் நோக்கம் : 



1. பாபிலோன் சிறையிருப்பில் கர்த்தருக்கு உண்மையிருந்த சில யூதர்களுடைய வரலாற்றை நமக்கு திருஷ்டந்தமாக வைக்கும்படியாக.




2. தேவன் இராஜ்ஜியங்களையும், தனிமனிதனையும் கவனித்து அவர்கள் செயல்களுக்கு தக்கதாக பதிலளிக்கிறார் என்பதை அறிந்திடவும். 



3. அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்யும்படியாகவும் 



4. சிறையிருப்பு இஸ்ரவேல் மக்களுக்கு நிரந்தரமான நியாயத்தீர்ப்பு முடிவு அல்ல என்பதை உணர்த்தவும். 



5. உலக இராஜ்ஜியங்கள் இன்று ஆளுகை செய்து கொண்டிருந்தாலும், அவற்றிற்கு மேலாக தேவன் ஆளுகை செய்து தமக்கு சித்தமானவர்களுக்கு அதை கொடுக்கிறார் என்பதை நாம் உணர்ந்திட 



6. நம்முடைய இரட்சகராகிய மேசியா சங்கரிக்கப்பட்டாலும். அவர் மீண்டும் தம்முடைய ஜனத்திற்காக இரண்டாம் முறை வருகிறார் என்பதைக் கூறவும். 



7. கடைசி நாட்களில் இஸ்ரவேலுக்கு நேரிடும் சில துன்பங்கள் முடிவில் சிலருக்கு நித்திய சந்தோஷத்திற்கும், சிலருக்கு நித்திய துன்பத்திற்கும் நடத்தும் என்பதை மக்கள் அறிந்து கொள்ளவும் எழுதப்பட்டிருக்கிறது. 



பொருளடக்கம்: 



1.         சுய சரித்திரம் 1-6 அதி  

          

அ.   பாபிலோனுக்கு சிறையாக கொண்டுபோகப்படுதலும்; தானியேலின் தூய வாழ்க்கையின் ஆரம்பமும்      1 அதி    

ஆ. சாம்ராஜ்ஜியங்களின் நிலையை குறித்த சொப்பனமும் அதன் விளக்கமும்      2 அதி    

இ.   நேபுகாத்நேச்சார் சிலை நிறுவப்படுதல்     3          அதி     



ஈ.       நேபுகாத்நேச்சாரின் பெருமையும், அவனுக்கு கிடைத்த தண்டனையும், மன்னிப்பும்                                                           4 அதி               

உ.   பாபிலோனிய இராஜ்ஜியத்தின் கடைசி ராஜா பெல்ஷாத்சார் மேல் வந்த நியாயத் தீர்ப்பும் முடிவும்             5 அதி    

ஊ. தானியேலின் பக்தி வைராக்கியத்திற்கு கிடைத்த வெற்றி                                                                                                                                        6 அதி 

   

2.         தானியேலுக்கு வெளிப்பட்ட முடிவின் தரிசனங்கள்     7-12 அதி




அ.   இராஜ்ஜியங்களின் உண்மையான குணாதியத்தையும் நிலைமையையும் தானியேல் அறிந்து கொள்ளுதல்      7, 8 அதி  

ஆ. தானியேலின் மன்றாட்டின் ஜெபமும், 70வது வாரத்தை குறித்த தரிசனங்கள்    9 அதி    

இ.   தானியேலுக்கு மகிமை நிறைந்த தேவ தரிசனம் 10 அதி   

ஈ.   தென், வட தேசத்து அதிபர்களைக் குறித்தும் எகிப்து, சிரியா இராஜ்ஜியங்களைப் பற்றின தரிசனங்கள்   11 அதி   

உ.   தன்னுடைய ஜனத்தையும், தன்னையும் பற்றின முடிவு நாள் குறித்து தரிசனங்கள்    12 அதி  

  

தானியேல் புத்தகத்தின் உட்பார்வை :




1.         தானியேலின் தூய்மையான இளமை வாழ்க்கையும், அதன் விளைவாக மற்றவர்களைவிட 10 மடங்கு அதிகம் ஞானம் உள்ளவனாகக் காணப்படுதல் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

2.         உலக சாம்ராஜ்ஜியங்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது போல அவ்வளவு தெளிவாக இராஜாக்களின் சரித்திர ஏடுகள் பதிவு செய்யப்படவில்லை. தானியேலின் காலத்தில் ஆண்ட இராஜாக்களின் பெயர்களைக் காண்போம்.

அ.     நேபுகாத்நேச்சார் Nebuchadnezzar கி.மு.606-562

ஆ.    மெரோடாக் Merodach கி.மு.562-560 இ. நெரிக்லிசார் Neriglissar கி.மு.560-556

ஈ.       நெபோனிடஸ் Nebonidus கி.மு.556-539

உ.      பெல்ஷாத்சார் Belshazzar கி.மு.550-539

ஊ.    தரியு Darius (மேதியன்) கி.மு.539-525

ஐ.      கோரேஸ் Cyrus கி.மு.539-530

3.         உலக சாம்ராஜ்ஜியங்கள் குறித்த தரிசனங்கள் 2, 7, 8, 11 தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன் தோற்றமும், முடிவும் அதற்கு இராஜ்ஜியத்தின் நிலையைக் கூறப்பட்டுள்ளது.

பாபிலோன் கி.மு.626

மேதியபெர்சியா கி.மு.539

கிரேக்க கி.மு.330

ரோம் கி.மு.63

பத்து இராஜ்ஜியம்

தேவனுடைய ராஜ்ஜியம்                  

4.       பத்து இராஜ்ஜியங்கள் அதாவது பத்து விரல்கள், பத்து கொம்புகள் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. கி.பி.337 முதல் 364 வரை ரோமை ஆளுகை செய்த தியோடைசியஸ் என்ற ராஜா இவன் காலத்தில் ரோம் இரண்டாகப் பிரிந்தது. கி.பி.364 கிழக்கு ரோம், மேற்கு ரோம் என்று பிரிக்கப்பட்டு மேற்கு ரோம் கி.பி.476 வரையும், கிழக்கு ரோம் கி.பி.1453 வரை நீடித்தது. இதில் மேற்கு ரோமில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகளும், கிழக்கு ரோமில் கிரீஸ், எகிப்து, சிரியா, துருக்கி, பல்கேரியா ஆடுகளும் அடங்கும்.

5.       அந்தி கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசன குறிப்புகள் உள்ளன. இதில் தானி 8:9ல் குறிப்பிடப்படுள்ள சின்ன கொம்பு சீரியா, மற்றும் பாலஸ்தீனாவை ஆண்ட அந்தியோக்கியா எப்பிப்பானேஸ் என்ற கிரேக்க தளபதியை குறிப்பதாகும். இவன் தேவாலயத்தில் பன்றியை பலியிட்டான். தன் சாயலாக ஒரு சிலையை செய்து அதை தேவாலயத்தில் வைத்தான். இஸ்ரவேல் ஜனங்களை கொடுமைப்படுத்தினான். எனவே, அந்தி கிறிஸ்துவிற்கு முன்னடையாளமாக சொல்லமாட்டான்.

ஆனால் தானி 7: 7,8ல் வரும் நபர் வரப்போகும் அந்தி கிறிஸ்துவை குறிக்கிறது. இவன் தேவனுடைய ஆலயத்தில் தேவனைப் போல உட்காருவான் (II தெச 2:4) இஸ்ரவேல் ஜனங்களையும் கொடுமைப்படுத்துவான். அவனே வரப்போகும் "சின்ன கொம்பு" என்று வர்ணிக்கப்பட்டவன்.

6. தானியேலின் 70 தீர்க்கதரிசன வாரங்கள்:

"வாரம்" என்ற வார்த்தை எபிரேய மொழியில் "SHABUA" என்றுள்ளது.

இதன் அர்த்தம் 7 நாட்கள் 7 மாதம் 7 வருடம் என்று பொருந்தக் கூடியதாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் வாரம் என்பது எந்த சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமாகும். 22 23

ஆதலால் 70 வாரங்கள் என்பது :

1 வாரம் = 7 வருடம் 70 வாரங்கள் = 7 x 70 = 490 வருடங்கள் ஆகும்.

70 தீர்க்கதரிசன வாரங்களின் துவக்கம், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டதிலிருந்து (தானி 9:25) கி.மு.444ல் துவங்கி, அவற்றின் 69வது வாரம் கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட (தானி 9:26) கி.பி.33ல் நிறைவடைகிறது.

தீர்க்கதரிசன வருடத்தில் 360 நாட்கள் மட்டுமே எனவே இந்த கணக்குப்படி கி.மு.444 + கி.பி.33 = 483 வருடம் (நாட்கள் கணக்குப்படி)

மேசியா சங்கரிக்கப்பட்டதோடு இஸ்ரவேலின் தீர்க்கதரிசன கடிகாரம் நின்று போயிற்று. (இது சிலுவையில் அறையப்பட்டதையே குறிக்கிறது). மீண்டும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையிலிருந்து இந்த கடிகாரம் மீண்டும் சுழ ஆரம்பித்து தனது கடைசி வார்த்தை அதாவது 7 வருடங்களை ஓடி முடிக்கும். இந்த ஏழு வருடங்கள் இயேசு கிறிஸ்துவின் இரகசிய பகிரங்க வருகைக்கு இடைப்பட்ட நாட்களாகும்.

தானியேல் புத்தகத்தின் சிறப்பம்சம்

1.        பெரிய தீர்க்க தரிசனத்தின் புத்தகங்களில் சிறியதும் அதிகம் வாசிக்கப்பட்டு ஆராயப்படும் புத்தகமாக உள்ளது.

2.       உலக பேரரசுகளின் சுருக்கமான வரலாறும் இறுதியில் நிறுவப்படும் கிறிஸ்துவின் ஆட்சியும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

3.       இந்த யுகத்தின் இறுதி முடிவைக் கூறும் சில பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் இதுவும் ஒன்று.

4.       ஏனைய பழைய ஏற்பாட்டு புத்தகங்களைக் காட்டிலும் ஆசிரியரின் வாழ்க்கையை சிறப்பாக காட்டுகிறது.

5.       புதிய ஏற்பாட்டின் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு இணையான பழைய ஏற்பாட்டின் வெளிப்பாட்டின் புத்தகமாக இது காட்சியளிக்கிறது. பாதி புத்தகம் சுய வரலாறாகவும் (1-6 அதி) மீதி தரிசனங்களாகவும் இப்புத்தகம் காணப்படுவது மிக சிறப்பு.

6.       பழைய ஏற்பாட்டில் இயற்கைப்பாற்பட்டு தனது ஜனங்களை பாதுகாக்க தேவன் செய்யும் செயல்கள் பஞ்சாகமத்திற்கு இணையாக இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. (2-ம்) அக்கினிச்சூளை, சிங்ககெபி, இவை மாத்திரமல்ல தேவன் கொடுக்கும் நியாயத்தீர்ப்புகள் நேபுகாத்நேச்சார் மிருகத்தைப் போல மாறுவது, கையறுப்பு தோன்றி எழுதுவது போன்றவையாகும்.
7.        தேவ மகிமையின் காட்சியை வெளிப்படுத்திக் காட்டும் நிலையில் சமகால எசேக்கியேலுக்கு சவால்விடும் புத்தகம். எனவே, இந்த காலத்தில் துன்பத்திற்கு மத்தியிலும் அதிகமான தேவ மகிமையை வெளிப்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment